தத்தி தத்தி அடியெடுத்து
தாண்டி தாண்டி நடைபயில
தாத்தா செய்த நடைவண்டி
தோதாய் வழி சமைத்த வண்டி
அமாவாசை தின நிசியன்று
அசந்து போய் தானமர்ந்து
அம்மாவூட்டிய சாதம்தனை
அறவே உண்ண முடியாதென
அடம்பிடித்த குறும்பு காலமது
கதைகள் பல நிதம் கேட்டு கேட்டு
பலாசுளைகள்போல இனிமை பெற்று
நிதமும் கதைகள் பல கேட்கவென்று
ஆச்சியின் பக்கம் மெல்ல சென்று
அடிமனதில் பசுமரத்தாணியாய்
பதிந்த பருவமது
வறுமையின் கொடுமை வந்து
வெதும்பியை தமக்கை வகுந்தபோது
சமபங்கு கிடைக்கலனு
சண்டைபிடித்த காலமது
விசுகோத்து சுவையும்
வெந்நீரில் கலக்கி தந்த
பால்மாவின் இனிமையும்
ஒன்னாய் தொட்டு உறிஞ்சு
உண்ட உன்னதமான காலமது
எத்தனை காலம் பிறந்தாலும்
இன்ப நினைவுகள் மலர்ந்தாலும்-இனி
குழந்தை பருவம் வந்திடுமா-இது
இலந்தைப்பழம்போல் இனித்திடுமா
0 comments:
Post a Comment