அக்கா


இன்னொரு அம்மா என்னக்கா
இன்ப துன்பத்தை பகிர்ந்து
என் இதயத்திற்குள் புகுந்து
இன்னிசை பாடும் தேவதை
என்னக்கா

குழப்படி செய்தால்
வழக்கப்படி வந்து
தடியடி கொடுத்து தடயம்
பதித்தவள் என்னக்கா
வறுமை வந்து வாட்டியபோது
பொறுமையாய் பசி தீர்க்க
தானுன்பதை விடுத்து
தம்பிக்கு கொடுங்கம்மாளென
தாட்சணியம் காட்டியவள்
என்னக்கா
வாழ்வில் திருமணம் எனும்
நறுமணம் வீச
தினமும் சிந்தனை
இளையவன் பக்கம் திரும்ப
இசைவாக்கமாய்
இயங்கியவளே என்னக்கா
ஆதரவு அன்பும் அவளது
இரு கரங்கள்
அரவணைப்புக்கு இவளே ஆதாரம்
தம்பி தம்பி என உச்சரிப்பதே
தாயவளின் தாரகமந்திரம்
ஆசைக்கொன்று அஸ்திக்கொன்று
அக்காளே அன்புப் பூக்கன்று
அடிக்கடி விடும் மூச்சுகாற்று
அவளது சுவாசக்காற்று
பல்லாண்டு நீ வாழ்க தாயே
பாசத்துடன் வாழ்த்துவது
உன் அன்பு சேயே

துன்பத்தில் தோள் கொடுப்பது மனைவி



பார்க்காமல் வந்த பார்வதியே
பாவங்களை நீக்கும் புண்ணியநதியே
உண்மையின் அடையாளமான உத்தமியே
ஊரே போற்றும் சித்திரமே
பிணியென்று எனக்கு வந்துவிட்டால்
பிசினைப் போல ஒட்டிக் கொள்வாளே
அருகினிலே தானிருந்து நித்தம்
ஔடதமாய் கலந்து ஆதரிப்பவளே
கண்ட நாள் முதல் கொண்டு
கண்ணிமைக்குள் வைத்து காப்பவளே
துன்பம் என்ற வாசகத்தை
தூக்கி தொலைவில் வீசியவளே
நல்குரவு என்ற நாற்றுதனை
நாட்ட நாட்டம் நாடாதவளே
அன்பு எனும் அகல்விளக்கேற்றி
அடியோடு இருட்டை நீக்கியவளே
வாழ்க்கை எனும் போருக்குள்ளே
வாகைச் சூட வந்தவளே
மனசு என்ற மாளிகைக்குள்
மங்காமல் வைத்து காப்பாளே

இருமனம் இணையும் திருமணம்



இல்லறம் எனும் நந்தவனம்
என்றும் வீசனும் நறுமணம்
அக்கினி சாட்சியாய் சுற்றிய மனம்
ஆயுள்வரை தொடரும் அன்பு பாலம்

குழந்தைகள் பிறந்ததும் குதூகலம்
கூடி ரசிப்பதால் சிம்மாளம்
பள்ளிச் செல்வது பசுமைகாலம்
பாடிப்பாடி மனையை அடைந்ததும் பரவசம்

இல்ல விளையாட்டு இன்பம் தரும்
இலக்கை அடைந்தும் மகிழ்ச்சி முழங்கும்
மங்களம் பொங்கும் மைதானம்
மார்புத் தட்டி மகிழ்வு பெறும்

நலமுடன் பயணித்தால் நல்லறம்
நாளு பேர் புகழுவது இல்லறம்
அன்புக்கு அர்த்தமண்டபம்
பண்புக்கு பாசுரம்

உண்மையான சொத்து உன் தாரம்
உறவுகளோடு வாழ்ந்தால் நிரந்தரம்
மறக்காதே நான் சொன்ன மந்திரம்
மணமேடையின் சிறப்பு என்றும் விளம்பரம்

வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும்



குழந்தையாய் இருந்தபோது

கும்மாளம் போட்டத் தளிரே
சிம்மாளம் புகுந்து நித்தம்
சீதேவியை வரவேற்றதுவே
(10)
பேதைமை தெரியா அகவையது
பெற்றோர் சுமந்த பிள்ளையிது
காலங்கள் ஓடி மறைந்துமே
கணப்பொழுதில் கட்டிளம்
அடையாளங் காட்டியதே
(13)
புத்தம் புதிய பூவே
சித்தமெல்லாம் கிலியே
பித்தம் அதிகம் சிரசிலேறி
நித்தம் நிம்மதியை குழப்பியதே
சுற்றம் கூடி வரும்போது
சொக்கத் தங்கம் முற்றம் நாடி
அன்பெனும் மலரைத் தூவி
அன்று அகமகிழ்ந்து வரவேற்றதுவே
(24)
நாணம் வந்து நயனம் பாட
நங்கையவள் மனதில்
வெட்கமும் கூட
கார்குழலில் கண்ணை மறைத்து
ஓரவிழியில் உருவம் பார்க்கும்
ஒற்றை ரோஜா இவள்தானோ
(17)
மொட்டு விட்ட முழுமலர் நீ
மொய்க்கும் வண்டு நெருங்கும் இனி
வெட்கம் உன்னிடம் விருந்து வைத்தால்
விருந்தாளி வந்து சுவைப்பான் கண்ணே
(16)

மழலைகள்

அழகுத் தங்க பொம்மைகள் இரண்டு
அரவணைப்பு கிடைக்குமோவென்று
ஆதங்கத்தில் தேடுதிங்கே
அன்புத்தேர் எப்போது வருமென்று

உண்டிகளை வாங்கிடவே உத்தமியிடம் பணமிருக்கா
வண்டியிலே ஏறிவர வசதியான இடமிருக்கா
ஒன்றுமறியா உன்னதத் தெய்வங்கள் இங்கே
தாய்வரவை தேடித்தேடி நித்தம்
கோடிப்பக்கம் தவமிருக்குதம்மா

திங்கள் வட்டத் திலகம் நுதலிலிட்டு
கால்களிரண்டில் கொலுசுமிட்டு
வசதிக்காரத் தாயின் முந்தானையைத் தொட்டு
பணக்கார சுவையை பதம் பார்க்குது இங்கே

அவள் ஓர் இலக்கியம்

கட்டழகு காரிகையொருத்தியே
கையிருப்பை வண்டியில் பொருத்தியவளே
செம்மொழி பேசும் செந்தாமரை இவளோ
சிகப்பாய் தளிர்வது இவளது தமிழோ
 

குறிலும் நெடிலுமாய் இருந்த கரங்கள்
உயிரும் மெய்யுமாய் ஒன்றாய் கலந்து
இயல் இசை நாடகமாய் இசைப்பவளே
கயல்விழியெனும் வீச்சருவாள் கொண்டு
எதிரியை வதைக்க வந்த இளவரசியே

வல்லினமும் மெல்லினமும் இணைந்து 
இடையினையெனும் இன்னிசை பாட
இலக்கணமும் கூடவே ஒத்தூத
செவிகளுக்குள் நுழைந்து
ரீங்காரமாய் ஒலிக்குதடி

சிறுகதையின் கருப்பொருளாய்
சித்திரத்தின் வர்ணமாய்
நாடகத்தின் நாயகியாய்
நம்கதையின் தேவதையாய்
நளினமான பெண்மகளே

கம்பனின் அழகு கவிதையாய்
காவியத்தில் மெழுகு பொம்மையாய்-நம்
கலாசாரத்தின் உயிர் தோழியாய்
ரசிக்க  ருசிக்கும் மகரந்த தேனிவளே
இவளுக்காகவே காத்திருந்திருந்தேன்
இவ்விலக்கியத்தை இயம்பிடவே....

பாரதம் பெற்ற பாரதி

பாப்பா பாட்டு பாடிய கவியே
பாவலர்கள் மனதிலோடும் நதியே
இசை வரியாய் வந்த சுதியே
அசைந்தாடுது அழகிய புவியே

எதுகையும் மோனையும் இருவரியே
ஈன்றெடுத்த தாய்க்கவியே
நவீன கவி வழியே வந்து
நர்த்தனம் புரிகின்றாயே

ஆண்டுகள் பல உருண்டோடியே
அச்சுப்பதித்ததுன் தேனகவையே
மா கவியின் மரியானா ஆழியே
மாந்தரின்னும் காணாத தொணியே

செம்மொழி வளர்த்த சித்திரமே
சங்காய் முழங்குதுமுன் சரித்திரமே
சந்தங்கள் வந்து சங்கீதம் பாட
சமரசம் காண்கிறதே அதனிசையோட

காலங்கள் கடந்து போக
கவிநயமோ மனதிலூற
துளியாய் துளியாய் சுவைக்கின்றேன்
திகட்டிவிடும் என்றெண்ணி

எனக்கு வாழ்த்த தகுதியில்லை-கவியே
இன்று முளைத்த காளான் நானே