அவள் ஓர் இலக்கியம்

கட்டழகு காரிகையொருத்தியே
கையிருப்பை வண்டியில் பொருத்தியவளே
செம்மொழி பேசும் செந்தாமரை இவளோ
சிகப்பாய் தளிர்வது இவளது தமிழோ
 

குறிலும் நெடிலுமாய் இருந்த கரங்கள்
உயிரும் மெய்யுமாய் ஒன்றாய் கலந்து
இயல் இசை நாடகமாய் இசைப்பவளே
கயல்விழியெனும் வீச்சருவாள் கொண்டு
எதிரியை வதைக்க வந்த இளவரசியே

வல்லினமும் மெல்லினமும் இணைந்து 
இடையினையெனும் இன்னிசை பாட
இலக்கணமும் கூடவே ஒத்தூத
செவிகளுக்குள் நுழைந்து
ரீங்காரமாய் ஒலிக்குதடி

சிறுகதையின் கருப்பொருளாய்
சித்திரத்தின் வர்ணமாய்
நாடகத்தின் நாயகியாய்
நம்கதையின் தேவதையாய்
நளினமான பெண்மகளே

கம்பனின் அழகு கவிதையாய்
காவியத்தில் மெழுகு பொம்மையாய்-நம்
கலாசாரத்தின் உயிர் தோழியாய்
ரசிக்க  ருசிக்கும் மகரந்த தேனிவளே
இவளுக்காகவே காத்திருந்திருந்தேன்
இவ்விலக்கியத்தை இயம்பிடவே....

0 comments:

Post a Comment